கழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘போயஸ் கார்டன் வீட்டில் வருமானவரித் துறை நடத்திய ரெய்டின் அடுத்தகட்டம் என்ன?’’ என்ற கேள்வியை அவர் முன் வைத்து, அவரது செய்திக் குவியலை உதிர்க்கச் சொன்னோம்.
‘‘போயஸ் கார்டன் வீட்டுக்குள் ரெய்டு போவார்கள் என்று சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்ல, எடப்பாடி தரப்பும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு தரப்புக்குமே அதிர்ச்சியான விஷயம்தான் அது. அன்று இரவு ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனை, ‘உங்கள் இடத்துக்குப் போகலாம், வாருங்கள்’ என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லி அழைத்திருக்கிறார்கள் வருமானவரித் துறை அதிகாரிகள். அவரும் கிளம்பிச் சென்றுள்ளார். ஒரு டெம்போ டிராவலர், ஐந்து கார்கள் சகிதம் கிளம்பிய அதிகாரிகள், நேராக போயஸ் கார்டனுக்குச் சென்றிருக்கிறார்கள். உள்ளே டிரங்க் பெட்டி ஒன்றையும் தூக்கிப்போனார்களாம். மாநகர போலீஸுக்கும் தகவல் தரப்பட்டது. அவர்களும் வந்திறங்கினார்கள். வருமானவரித் துறை அதிகாரிகள் கொண்டுவந்த பெட்டியைப் பார்த்து போலீஸ் அதிகாரிகள் மிரண்டு விட்டார்கள். ‘கைப்பற்றும் ஆவணங்களை இதில் வைத்து எடுத்துச்செல்வதுதான் எங்கள் வழக்கம்’ என்று வருமானவரித் துறை சீனியர் அதிகாரி சொன்னாராம். ஐந்து மணி நேர சோதனைக்குப் பிறகு, அந்தப் பெட்டியில்தான் முக்கியமான ஆவணங்களை எடுத்துச்சென்றார்கள்.’’
‘‘மத்திய போலீஸை அழைக்காமல், தமிழக போலீஸை ஏன் வருமானவரித் துறையினர் அழைத்தார்கள்?’’
‘‘இங்கே நடப்பதும் மத்திய அரசின் ஆட்சிதான் என்று நினைத்திருக்கலாம். தமிழக போலீஸ்தான், லோக்கல் கட்சிக்காரர்களைச் சமாளிக்கும் என்று நினைத்திருக்கலாம். முதலில் ஸ்பாட்டுக்கு வந்தவர், சீனியர் போலீஸ் அதிகாரி சாரங்கன். பிறகு, ஜெயராமன் வந்தார். இருவரும் கூடுதல் கமிஷனர்கள். இணை கமிஷனர் மனோகரன், டெபுடி கமிஷனர்கள் சரவணன், அரவிந்த் ஆகியோருடன் சுமார் 400 போலீஸார் அவசரமாக வரவழைக்கப்பட்டனர். அரவிந்த்தை மட்டும் போயஸ் கார்டனுக்குள் போய் பாதுகாப்புப் பணியைப் பார்க்கச் சொன்னார்கள். வேறு யாரும் உள்ளே செல்லவில்லை.’’
‘‘ரெய்டில் சிக்கியது என்ன?’’
‘‘ஆடிட்டர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரெய்டு பற்றிக் குறிப்பிட்டிருந்த வாசகங்களைக் கவனித்தீரா? ‘மன்னார்குடி மாஃபியா வரி ஏய்ப்பு செய்ததற்கான எலெக்ட்ரானிக் ஆதாரங்களை ஜெயலலிதா வீட்டில் வைத்திருந்தனர். அந்த அறையின் சாவியை சசிகலா வைத்திருந்தார். ஜெயலலிதாவின் கோட்டைக்குள் யாரும் நுழைய மாட்டார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். உயர் நீதிமன்ற அனுமதி பெற்று வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது’ எனக் குருமூர்த்தி சொல்லியுள்ளார். இப்படி அவர் சொல்லியிருப்பதன் பின்னணியில் நிறைய மர்மங்கள் புதைந்துகிடப்பதாக அ.தி.மு.க வட்டாரத்தில் பேச்சு உள்ளது.’’
‘‘ ‘பென் டிரைவ், லேப்டாப் ஆகியவற்றை வருமானவரித் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்’ என்று விவேக் கூடச் சொன்னாரே?’’
‘‘ஆமாம்! ஏதோ ஒன்றைத் தேடித்தான் வருமானவரித் துறை அதிகாரிகள் வந்ததாக சசிகலா தரப்பினர் பூடகமாகச் சொல்கிறார்கள். ‘ஜெயலலிதா அறையின் சாவியைக் கொடுங்கள். பத்து நிமிடங்களில் சர்ச் வாரன்ட்டைக் கொண்டுவந்து காட்டுகிறோம்’ என்று வருமானவரித் துறை அதிகாரிகள் விவேக்கிடம் சொல்லியிருக்கிறார்கள். உடனே தினகரனிடமும், ஒரு வழக்கறிஞரிடமும் விவேக் போனில் பேசினாராம். ‘இதுவரை சர்ச் வாரன்ட் இல்லாத நிலையில், இந்த இரவு நேரத்தில் எங்கும் வாரன்ட் வாங்க முடியாது. எனவே, சாவியைத் தரமுடியாது என்று கறாராகச் சொல்லிவிடவும்’ என்று அவர்கள் ஆலோசனை சொல்லி உள்ளனர். அப்படியே விவேக் செய்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்த ஓர் அதிகாரி, யாரிடமோ போனில் பேசினார். அதன்பிறகு, ஜெயலலிதா அறையின் சாவியை அவர்கள் கேட்கவில்லையாம்.’’
‘‘பென் டிரைவ் தகவல்களைச் சொல்லும்!’’
‘‘இங்கு, 2011-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர்மீது ஜெயலலிதா எடுத்த அதிரடிகளை நினைவுபடுத்திப் பார்க்கவும். ஜெயலலிதாவை ஒதுக்கிவிட்டு அதிகாரத்தை எடுப்பது தொடர்பாக, பெங்களூருவில் ஒரு ஹோட்டலில் சசிகலாவின் உறவினர்கள் நடத்திய உரையாடலின் விவரங்கள் கிடைத்து, அவற்றை ஒரு பென் டிரைவில் ஜெயலலிதா பத்திரப்படுத்தி வைத்ததாகச் செய்திகள் உண்டு. அப்போது, தமிழக போலீஸின் உளவுத்துறை தலைமைப் பொறுப்பில் இருந்தவர் ராமானுஜம். அவரும் தன் பங்குக்கு சசிகலா தரப்பினரின் அரசியல் தலையீடு, சேர்த்த சொத்துகள், யார் யார் பெயரில் அவை இருக்கின்றன, அ.தி.மு.க-வை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் விவரங்கள் என்று பல ஆதாரங்களைச் சேகரித்துக்கொடுத்தார். அதைத் தொடர்ந்து நடந்த விசாரணைதான், போயஸ் கார்டனிலிருந்து சசிகலா வெளியேறக் காரணமாக அமைந்தது. அதன்பிறகு சிறிது காலம் கார்டனில் செல்வாக்காக இருந்தவர் ‘துக்ளக்’ சோ. சிறிது இடைவெளிக்குப் பிறகு, சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்குள் பிரவேசித்தது வேறு கதை.’’
‘‘ஜெயலலிதா வைத்திருந்த அந்த பென் டிரைவ் என்ன ஆனது?’’
‘‘ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சையில் இருந்தபோது, போயஸ் கார்டனில் வேலை பார்த்த பெண் ஒருவர் திடீரென காணாமல் போய்விட்டதாக மீடியாவில் பேசப்பட்டது அல்லவா? ஜெயலலிதாவின் எலெக்ட்ரானிக் பொருள்களைக் கைவசம் வைத்திருந்தவர் அவர் தானாம். அவற்றில், பென் டிரைவ் ஒன்றும் அடக்கம். அதோடு அந்தப் பெண் எஸ்கேப் ஆனதாகச் சொன்னார்கள். கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியைச் சேர்ந்தவர் அவர். அங்கே மஃப்டியில் சென்ற சென்னை போலீஸார், யாரோ திருடனைத் தேடி வந்திருப்பதாக வெளியே சொல்லிக்கொண்டு அந்தப் பெண்ணைத் தேடியதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அந்த பென் டிரைவ் போயஸ் வீட்டில்தான் இருந்ததாகச் சொல்கிறார்கள்.’’
‘‘தலை சுற்றுகிறதே?’’
‘‘அந்த பென்டிரைவைத் தேடித்தான் வருமானவரித் துறை அதிகாரிகள் போயஸ் கார்டனில் நுழைந்திருக்கிறார்கள். சசிகலாவை வசமாகச் சிக்கவைக்கும் அந்த பென் டிரைவ் பற்றி டெல்லியில் உயர்மட்டத்திலிருந்து அவர்களுக்குத் தகவல் வந்ததாம். இன்னொரு தகவலும் சொல்கிறார்கள்… சில நாள்களுக்குமுன் சசிகலாவைச் சிறையில் சந்தித்தார் ஒரு வழக்கறிஞர். ‘இந்த பென் டிரைவ் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றைப் போயஸ் கார்டனிலிருந்து அகற்றிவிடவும்’ என விவேக்குக்கு அவர்மூலம் சசிகலா தகவல் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. அந்த பென் டிரைவ், இப்போது ரெய்டில் சிக்கிவிட்டது. ‘இப்போது ரெய்டு நேரம். சசிகலா குடும்பத்தினர் பி.ஜே.பி அரசுமீது குற்றம் சாட்டுகிறார்கள். இவர்கள் பேசி முடித்ததும், அந்த பென் டிரைவ் பேசும்’ என்கிறார்கள், வருமானவரித் துறை அதிகாரிகள். ரெய்டின் அடுத்த கட்டம் அந்த பென் டிரைவை மையமாக வைத்தே அமையும் என்று தகவல் உலாவுகிறது.’’
‘‘இனி என்ன நடக்கும்?’’
‘‘அடுத்த இரண்டு மாதங்களுக்கு சசிகலாவின் குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவர், விசாரணைக்கு ஆஜராக வேண்டியிருக்கும். நடராசன், திவாகரன், விவேக் என எல்லோரும் தினகரன்மீது வருத்தத்தில் இருக்கின்றனர். ரெய்டு நேரத்தில் தினகரன், ‘என்னிடம் எதுவும் இல்லை; என் உறவினர்களிடம் இருக்கும் சொத்துகள் மற்றும் ஆவணங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று சொன்னது, குடும்ப உறவுகளிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘தினகரன்தான் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். அவர் அவசரப் பட்டதால்தான், மத்தியில் பி.ஜே.பி-யையும் பகைத்து, மாநிலத்தில் எடப்பாடி தலைமையிலான அரசாங்கத்தையும் பகைக்கும் நிலை ஏற்பட்டது. அதனால்தான், நம் குடும்பத்துக்கு இவ்வளவு சிக்கல்’ என்று அவர்கள் நினைக்கின்றனர்.’’
‘‘ஓஹோ.’’
‘‘அதே நேரத்தில், தினகரனின் தங்கை சீதளாதேவியும், அவருடைய கணவர் ரிசர்வ் பேங்க் பாஸ்கரனும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளனர். அதற்கு மறுநாள், லெக்சஸ் கார் இறக்குமதி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராசனுக்கும், தினகரனின் தம்பி பாஸ்கரனுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்துள்ளது. அடுத்தடுத்து வரப்போகும் தீர்ப்புகளை அவர்கள் கவலையுடன் எதிர்நோக்குகின்றனர்’’ என்றபடி பறந்தார் கழுகார்.