நீண்ட இழுபறிக்குப் பின்னர் இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
84 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் இரு தரப்பினரும் தாக்கல் செய்த ஆவணங்களின் விவரங்கள், வாத விவாதங்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமாரின் கோரிக்கை என்ன? ஆகியன தொடர்பாக விரிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிகளுக்கு ஒதுக்கியது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1. மக்களவையில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினருக்கு 34 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது. அதேவேளையில் டிடிவி தரப்புக்கு 3 எம்.பி.,க்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது.
2. மாநிலங்களவையில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினருக்கு 8 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது. டிடிவி தரப்புக்கு 3 எம்.பி.,க்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது.
3. தமிழக சட்டப்பேரவையில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினருக்கு 111 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருக்கிறது. டிடிவி தினகரன் தரப்புக்கு 20 எம்.எல்.ஏ.,க்கள் (தகுதி நீக்கம் செய்யப்பட்ட சிக்கலில் இருக்கும் 18 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட)ஆதரவே இருக்கிறது.
4. புதுச்சேரி அதிமுகவில் 4 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினருக்கே இருக்கிறது.
5. எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் ஆதரவு மதுசூதனன் தலைமையிலான ஓ.பன்னீர்செல்வம், செம்மலை உள்ளிட்ட மனுதாரர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அணியினருக்கே அதிகமாக இருப்பதால் சின்னம் அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
6. இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் தலைமையிலான அணியினர் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயரைப் பயன்படுத்தவும் எந்தத் தடையும் இல்லை.
7. அதேபோல் கட்சிக் கொடியையும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தையும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியே இனி பயன்படுத்த முடியும்.
8. இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக கடந்த மார்ச் 22-ம் தேதி தேர்தல் ஆணையம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது.
9. சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தள சிக்கல் பாணியிலே இரட்டை இலை பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை யாருக்கு இருந்ததோ அவர்களுக்கே சின்னம் ஒதுக்கப்பட்டது.
10. அதிமுகவுக்கு கோடிக்கணக்கான தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது. அதில் எந்த அணிக்கு ஆதரவு என்பதை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் ஆதரவின் அடிப்படையிலேயே உறுதி செய்ய முடியும். எனவே, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு கொண்ட அணிக்கே இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுகிறது. எனவே, சின்னம் ஒதுக்கீடு செய்ய பொது வாக்கெடுப்பு தேவையில்லை.