ஸ்ரீமகாலட்சுமி செல்வத்துக்கு அதிபதி. புகழ், கல்வி, வீரம், வெற்றி, புத்திரபாக்கியம், தைரியம், தனம், தான்யம், சுகம், இன்பம், அறிவு, அழகு, கௌரவம், அறம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் ஆகிய பதினாறு செல்வங்களையும் அருள்பவள் ஸ்ரீமகாலட்சுமி. இவற்றையே, ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க’ என்று பெரியோர்கள் வாழ்த்துகின்றனர்.
செல்வத்துக்கு அதிபதி மகாலட்சுமி என்றால், மகாலட்சுமியின் அருள்பெற்றவர்களுக்கு மகாலட்சுமியின் உத்தரவின்படி செல்வங்களை அருள்பவர் குபேரன். பார்வதிதேவியின் கருணையினால், தான் இழந்த கண்பார்வையைப் பெற்ற குபேரன், சிவபெருமானின் அருளால் வடதிசையின் அதிபதி என்ற பதவியையும், செல்வத்தை வழங்கும் அந்தஸ்தையும் பெற்றார். இவரே செல்வத்தைக் காப்பவராகவும் திகழ்கிறார்.
நீரூற்று எவ்வாறு நீரைத்தருகிறதோ, அதுபோன்று மனதார முறைப்படி குபேரனை வழிபடுகிறவர்களுக்கு, தளர்வில்லா தனபாக்கியம் தந்து அவர்களின் வாழ்வை மேன்மையடையச் செய்கின்றார்.
[You must be registered and logged in to see this image.]கோதுமை நிறத்தில் குள்ளமான உருவம்கொண்டு, சிரித்த முகத்துடனும் தொப்பையுடனும் காட்சி தரும் குபேரன், வலக்காலை தொங்கவிட்டு, இடக்காலை மடித்துக்கொண்டு அமர்ந்திருப்பார். வலக்கையில் அபய முத்திரையும், இடக் கையில் கீரிப்பிள்ளையும்கொண்டு, வலப்பக்கத்தில் மனைவி கிட்டாரியுடன் காட்சி தருகிறார். கயிலாய மலைக்கு அருகில் இருக்கும் வடக்குப் பகுதியின் உயரமான அளகாபுரிதான் குபேரன் வசிக்கும் நகரமாகும்.
தீபாவளியையொட்டி மகாலட்சுமி குபேர பூஜை செய்வது மரபு. தீபாவளியை முன்னிட்டு மகாலட்சுமி குபேர பூஜையைச் செய்யும் முறைகள், பூஜை ஏற்பாடுகள், தேவையான பொருள்கள் போன்ற விவரங்களைக் காண்போம்.
ஸ்ரீலட்சுமிகுபேர யந்திரம்
ஸ்ரீலட்சுமிகுபேர யந்திரத்தை வெள்ளி அல்லது செம்பில் தயார் செய்துகொள்ள வேண்டும். மூன்றுக்கு மூன்று என்ற அளவில் உள்ள யந்திரத்தை, படத்தில் உள்ளது போல் 9 கட்டங்களில் எண்களைப் பொறித்து தயார் செய்ய வேண்டும்.பிறகு பூஜைக்குத் தேவையான பொருள்களையும் தயார் செய்து கொள்ள வேண்டும்.
மஞ்சள்பொடி, பலகை, தண்ணீர், குபேர யந்திரம், புதுத்துணி, யந்திரம் வைக்க, கலசம், மாவிலை, பூக்கள், வாழை இலைகள், சந்தனம், குங்குமம், தேங்காய், வாழைப்பழங்கள், வெற்றிலை, பாக்கு, விளக்கு, நெய், எண்ணெய், தீப்பெட்டி, தேன், தயிர், பஞ்சாமிர்தம், தீபம், தூபம், ஆரத்தி தட்டு, சாம்பிராணி, ஊதுவத்தி, பஞ்சபாத்திரம், உத்திரினி, பூணூல், நகைகள், இனிப்புப் பதார்த்தங்கள், கோதுமை, அரிசி, நவதானியங்கள், நிறைய கிண்ணங்கள் மற்றும் பல பொருள்களை அவரவர் விருப்பத்தின்படி சேர்த்துக் கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this image.]பூஜை செய்யும் முறை
ஸ்ரீலட்சுமிகுபேர படத்தை வைத்து, அதன் முன்பாக கிழக்கு திசையில் பலகையை வைத்து அதன்மீது நெல்லைப் பரப்பி, பின் வாழை இலையை விரித்து வைக்க வேண்டும். வாழை இலையின் மீது புதிய துணியை விரித்து அதில் ஸ்ரீலட்சுமிகுபேர யந்திரத்தை வைக்க வேண்டும். இதற்குப் பக்கத்தில் மாவிலை, பூமாலை மற்றும் குங்குமம் வைத்த கலசத்தைச் சற்று உயரமாக இருக்கும்படி வைக்க வேண்டும்.
முதலில் கணபதியை தியானம் செய்தபின், ஒன்பது நாணயங்களை எடுத்துக்கொண்டு அதை கட்டத்திலுள்ள எண்களை மறைக்காத வண்ணம் வைக்க வேண்டும். பின் சிவப்பு நிற மலர்களை ஒவ்வொன்றாக நாம் வைத்துள்ள நாணயங்கள்மீது சமர்ப்பிக்க வேண்டும். குபேர படத்துக்கு மாலை அணிவிக்க வேண்டும். விளக்கு ஏற்றி வைத்து, ஊதுவத்தி, சாம்பிராணி ஏற்றிவிட்டு, பின் குபேரருக்குரிய மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டும். பிறகு புஷ்பம் சாத்தி, தூப தீபம் காட்டி, இனிப்பு வகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும். சிரத்தையுடன் ஸ்ரீமகாலட்சுமி குபேர பூஜை செய்து, அளவற்ற செல்வங்களைப் பெற்று சிரமமில்லாமல் வாழ்வோம்.
குபேர காயத்ரி
ஓம் யஷ்யாய ராஜாய வித்மஹே, அலகாதீசாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத்…
குபேர ஸ்தோத்திரம்
சங்க பத்மாதி நிதயே குபேராய நமோ நம:
தனதான்ய ஸ்ம்ருத்திஸ்து த்வத் ப்ரஸாதாத் மயிஸ்த்திர:
நவநிதி ஸமோபேதம் தன தம்யாண புஷ்பகம்.
பிங்காக்ஷம் பாவயே நித்யம் ஹைம வர்ண மநோஹரம்…
ஸ்ரீ தனாகர்ஷண ஸ்ரீ மஹாலட்சுமி ஸஹிதம்
ஸ்ரீ குபேர ராஜம் தாயாயாமி
ஸ்ரீ தனாகர்ஷண ஸ்ரீ மஹாலட்சுமி ஸஹிதம் ஸ்ரீ குபேராய நம: